Pages

Monday, December 3, 2012

சோகம்

சோகம் நம் விசித்திர வாழ்வின் 
ஒரு பாகம் 
ஆமை போல வேகமின்றி மனதைவிட்டு 
விலகிட தயங்கிடும் 
பாவம்! என்று இரங்கவைக்கும் 
நவரசத்தில் ஓர் இரசம் 
மனதில் இருள் பெருக்கி 
பிணமாய் உலவ வைக்கும் இயந்திரம் 
இலாபமே இல்லாத துக்கத்தில் 
கிடைத்திடும் ஊதியம். 

நீலா.

"ஆகிடு"

ஓர் கவிதையை வடித்திட - நீ 
கற்பனைக்கதவினை திறந்திடு 
ஓர் சாதனை படைத்திட - நீ 
பல கஷ்டங்கள் பட்டிடு 

அன்பினில் திளைத்திட - மற்றோருக்கு 
உன் நேசத்தை நீ கொடு 
பார்போற்ற மிளிர்ந்திட - நீ 
பண்புடனே திகழ்ந்திடு 

இன்பத்தை அருந்திட - நீ 
துன்பத்தை சகித்திடு 
மானுடனாய் திகழ்ந்திட - நீ 
மாண்போடு வாழ்ந்திடு 

வாழ்வின் உயர் இலக்கினை அடைந்திட 
இப்படி நீ ஆகிடு. 
 நீலா.


Tuesday, July 10, 2012

காலம்

நான் கடந்து வந்த காலத்தை திரும்பிப்பார்த்தேன் - அது 
இன்ப துன்ப நினைவுகளோடு இறந்துவிட்டது 
நான் நிகழுகின்ற காலத்தை நினைத்துப்பார்த்தேன் - அது 
நிதானமாக சிந்தித்துச்செயற்படென்றது 
மலரப்போகும் காலத்தை நான் மனதில் கொண்டேன் - அது 
வரப்போகும் சவால்களை எதிர்கொள் என்றது 

ஏன் காலம் என்பது மானிடரை ஆட்டிவைக்குது?
அது காலகாலமாக நம் வாழ்வை ஆட்சிசெய்யுது. 


நீலா 

Saturday, May 12, 2012

என் தாய்

வாழ்க்கையெனும் பட்டறையில் 
புடம் போடப்படும் தங்கம் 

பசும் பூந்தோட்டத்திலே
பூத்திடும் வெள்ளைப்  பூவின் உள்ளம்

கடமையே கண்ணாகக் 
கனன்றிடும் நெஞ்சம் 

கடவுளையே மிஞ்சிடும் 
தியாகத்தின் சின்னம் 

நான் பொக்கிஷமாய் பேணவேண்டிய
'தங்கக்கிண்ணம்' 

அவள் தான் என் தாய் 
இது திண்ணம்!




நீலா

Thursday, April 12, 2012

எனக்குள்ளே கேள்விகள் ???

இயற்கை கற்றுத்தந்ததா - எமக்கு 
இயலாமையை ?
இறைவன் கற்றுத்தந்தானா - எமக்கு 
பொறாமையை ?
குழந்தை கற்றுத்தந்ததா - எமக்கு 
கபட நாடகத்தை ?
குருவிக்கூட்டம் கற்றுத்தந்ததா - எமக்குள் 
 வேற்றுமையை ?

கற்றறிய வேண்டியவை பல இருந்தும் 
கண் பார்வையற்றவராய் நிதம் வாழ்வது ஏன் ?
உற்ற உயிர் உடலை விட்டு பிரிவதையே அறியாத 
 நிலையற்ற வாழ்வில் போலி வேடமும் ஏன் ?

ஆறறிவாம் பகுத்தறிவை பரமனவன் தந்தாலும்,
சிற்றறிவால் சிதறுண்டு - வாழ்வின் உயர் 
அர்த்தமத்தை அதர்மத்தால் அழிப்பதாலோ - நிதம் 
தர்மமே அள்ளுண்டு போகின்றதோ ... ???





நீலா

Thursday, March 8, 2012

அறிவியல்

ஆறு அறிவு மனிதரினாலே 
உலகில் வந்த அறிவியல் 
ஆழ வேரூன்றி அழித்திட முடியா
அபாயத்தின் அறிகுறிக்கருவிகள்

கண்டுபிடிப்புகள் பற்பல 
கண்கவர் காட்சிகள் பற்பல 
எண்ணில் அடங்காத எண்ணங்கள் 
                                                      சொல்லில் அடங்காத கலை வண்ணங்கள் 


இத்தனையும் மனிதரின் மகிழ்விற்கே - ஆனால் 
இயற்கை வளத்தின் அழிவிற்கே 
கற்பனைக்கு எல்லை ஏதிங்கே - ஆனால் 
அளவு மீறினாலோ அமுதம் விஷமிங்கே 

விஞ்ஞானத்தின் விந்தைகளோ 
வானை விஞ்சுதங்கே 
மெஞ்ஞானத்திலோ பிரபஞ்ச ஒழுங்கு 
மீறுது இங்கே 

பூமித்தாயவளின் தாழாத நெஞ்சக்குமுறலினால் 
பூமித்தட்டுகளோ தடுமாறுகின்றன அங்கங்கே 
நிலநடுக்கங்கள் ஒருபுறம் எரிமலைகள் மறுபுறம் 
ஆழிப்பேரலையின் கோரதாண்டவமோ மறுகணம் 

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாய் 
பனிப்பாறைகளோ துருவங்களில் சமுத்திரமாய் 
மழைக்காலமின்றி மாரி மழை கோடையிலே 
ஊழிக்காலத்தின் வெள்ளப்பெருக்கோ 
ஊரை மேவுதிங்கே 

எனினும்...


ஆண்டாண்டு காலமாய் அறிவியலில் அடியெடுத்து வைத்து 
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்றவாறு 
கண்டத்துக்கு கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கி
அண்டத்தை அழிக்கின்ற சபதம் வேண்டாமிங்கே 

ஆறறிவு மனித ஆற்றலினால் 
ஆக்கம் பெற்ற அறிவியல் 
சீரான இயற்கையின் இயங்கு சக்தியைச்சிதைக்காமல் 
பாரதனைப்பாதுகாத்து பரிமளிக்கச்செய்யட்டுமே !!!




நீலா