Pages

Monday, April 3, 2017

எதை எழுத என் கவியில்?

ஆண்டுகள் பல ஆனதன் பின் - நெஞ்சைத்
தீண்டும் தமிழ்ச்சொற்களை பிரிந்திருக்கேன் - என்று
மீண்டும் எழுதுகோலை எடுத்திருந்தேன்- நான் 
உவகை கொண்டு கவிவடிக்க துடித்திருந்தேன் 

கவிதை என்றவுடன் கற்பனையில் - பழம்
கவிஞர் தோரணையில் உவமை வரும் 
இயற்கை அழகு வர்ணனையும் - அகம்
இன்பமுறும்  சொற்றொடரும் பின்னேவரும் 

இப்படியே கற்பனையில் நான் களித்திருக்க - என்னை 
அப்படியே சொற்பனத்தினின்று எழுப்பியது 
அத்தனையும் தாறுமாறாகவே தென்படுகின்ற - நம்மைச்
சுற்றியேயுள்ள யதார்த்த வாழ்க்கையது 

கவிஞனென்றால் சற்று பொய்யுரைப்பான் 
இன்னும் அழகிற்கு அழகினைக் கூட்டிடவே - ஆனால் 
ஆரம்பமே போலி ஆகிடையில் - நான் 
ஆயிரம் வர்ணித்து என்ன பயன் ?

எதைப்பற்றி நான் எழுத என் கவியில்? - மனிதம் 
உயிர்ப்பற்று இருக்கும் வேளை தனில்
இதோ சில உதாரணம் உங்களுக்காய் - எங்கள் 
மாய உலகினை துகிலுரிக்க 

ஓடி விளையாடு பாப்பா என்ற 
பாரதி இப்போது என்ன சொல்வார் 
அடுக்ககங்களுக்குள் முடங்கிக்கிடக்கும்  
இயந்திரங்களாய்ப்போன சிறார்களுக்கு ?

தன் கவியிலே நல் ஒழுக்கம்தனை உவந்த 
கம்பரும் கலங்கிப்போய்விடுவார் - தற்பொழுதிலே 
வெளிவரும் செருகேடுகளில் 
பிணைக்கப்படும் கொச்சைத்தமிழ் கேட்டு 

தமிழுக்கும் கொச்சைக்கும் தொடர்பில்லை- என்ற
தருணமும் இருந்தது ஒரு காலம் - ஆனால் 
கொச்சையும் ஆபாசமும் தற்போது நாகரிகம் - அதனால் 
இடமில்லை செந்தமிழுக்கும் ஒழுக்கத்திற்கும் 

மென்மையாக தென்றல் எம்மை வருடிச்செல்லும் 
என்றெல்லாம் புனைந்து எழுத நான் விளையவில்லை 
ஏனெனில், காற்றினிமைத்திவலை கொண்டு நிதம்
காற்றையே போலியாக்கும் சக்திகொண்டதிந்த சமுதாயம் 

வஞ்சியவள் தனை உவமித்த கவிஞனெங்கே? - அவன் 
இப்போது வந்து பார்க்கவேண்டும் பெண்ணியத்தினை 
பெண்ணடிமைக்கெதிராக குரலெழுப்பிய - அவன் 
உரிமை கூட இப்போது கேள்விக்குறியே!

விஞ்ஞானத்தைப்பற்றி கூறவாவேண்டும் - அதன் 
ஆக்கங்களோ அளப்பரியவை - ஆனால் 
அழிவுகளோ அதை விடைப்பெரியவை - அட 
நமக்கென்ன வந்தது - இப்போது 
பணம் ஒன்றே அனைத்தையும் வெல்லுது!

இதுவரைக்கும் என் புலம்பலை வாசிப்பது அரிது - அப்படி 
வாசித்திருந்தால் தங்கள் மனதைரியம் சிறப்பிற்குரியது- இக் 
கவிதையால் பெரிதாய் என்ன செய்துவிடமுடியும் என்றெனக்குத்தெரியாது -ஆனால், இது உங்களை ஒரு நொடியாவது நிறுத்தி மனமுறுத்தியிருந்தால் 
அதுவே எனக்கு பெரிது! 

எப்பொழுது எழுத நினைத்தாலும் கோபமும் அறிவுரையும் தானா - அடுத்த தடவை
கவிதையை சற்று மாற்றியே எழுதவேண்டும் நீலா! - என்ன செய்வது மாற்றியெழுதப்படாமல் கறை தோய்ந்த கதைகள் இருக்கின்றனவே பேனா! - அடுத்தமுறை உன் முனையின் உயிர்ப்பிற்காய் காத்திருப்பவளாய் நான்...




No comments:

Post a Comment